ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் எண்ணெய்: அமரிக்கா கூறுவது என்ன!

வாஷிங்டன்: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச அளவில் இன்று மிகப்பெரிய அளவில் கவலையளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது எரிபொருள் விலை உயர்வு என்றால் மிகையில்லை. 

போர் மூண்ட நாளில் இருந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 30 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து 20-25% தள்ளுபடி விலையில் வாங்குவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது. அதிலும் மிக முக்கியமாக, கச்சா எண்ணெய் டெலிவரியின் போது அமெரிக்க டாலரில் இல்லாமல் இந்திய ரூபாயில் கட்டணம் செலுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியது. 

மேலும், கச்சா எண்ணெய் கொள்முதல் மற்றும் விலைதொடர்பான முக்கிய தகவல்களை நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்தது. ரஷ்யா உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்த கேள்விக்கு, சரியான நேரத்தில் நாட்டின் நலன் கருதி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியது.

மேலும் படிக்க | ரஷ்யா – உக்ரைன் போர்: கிவ் நகரில் மார்ச் 17ம் தேதி வரை ஊரங்கு உத்தரவு அமல்

இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது அமெரிக்காவின் தடைகளை மீறிய செயல் அல்ல என்பதை அமெரிக்க நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

அதே சமயம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு மத்தியில் இந்தியாவின் நிலை குறித்து கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, “இன்றைய சூழலில் இந்தியாவின் நிலைப்பாடு, வரலாற்றில் எவ்வாறு பதிவு செய்யப்படும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ரஷ்யாவுக்கான ஆதரவு என்பது, போரினால் ஏற்படும் பேரழிவுக்கான ஆதரவாகும் என்பதை இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

உக்ரைன் ரஷ்யா பிரச்சனையில் இந்தியா யாரையும் ஆதரவிக்கவில்லை என்பதோடு, பேச்சுவார்த்தை மூலம் கருத்து வேறுபாடுகளை தீர்க்க வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகிறது. ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா.வின் எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பிலும் இந்தியா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் ஆன எமி பெரா, இந்தியா மலிவான விலையில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்க விரும்புவதாகக் கூறப்படும் செய்திகள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், குவாட் அமைப்பின் தலைவராகவும், உள்ள இந்தியா, தனது நடவடிக்கைகள் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ புடினுக்கும் அவரது ஆக்கிரமிப்புக்கும் ஆதரவளிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது என்றார்.

மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.