ரூபிள்-ரூபாயில் வர்த்தக பரிவர்த்தனை இந்தியா விரும்பும் எதையும் தருவோம்: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பேட்டி

புதுடெல்லி: ‘இந்தியா விரும்பும் எந்த பொருளையும் விநியோகிக்க ரஷ்யா தயாராக இருக்கிறது. எங்களின் இருதரப்பு வர்த்தகம் ரூபிள்- ரூபாய் பரிவர்த்தனையில் நடக்கும்’ என்று  ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார். உக்ரைன்-ரஷ்யா போர் நடந்து வரும் நிலையில், ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தார்.  டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நேற்று  சந்தித்து பேசினார். பிரதமர் மோடியை அவர் சந்தித்தார். பின்னர் லாவ்ரோவ் கூறுகையில், ‘‘இந்தியாவிற்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகள் பல சிரமங்களுக்கு மத்தியிலும் வலுவாக உள்ளன. பயனுள்ள சந்திப்புகள் மற்றும் பேச்சுவார்த்தைகளை நாங்கள் நடத்தியுள்ளோம். இந்தியா விரும்பும் எந்தவொரு பொருளையும் விநியோகிக்க ரஷ்யா தயாராக இருக்கிறது. இந்தியா உடனான வர்த்தகத்தில் ரூபிள் மற்றும் ரூபாய் மூலமான பரிவர்த்தனை முறை குறித்து ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. மேற்கத்திய முறை அல்லாத பண பரிவர்த்தனை செய்வதை தீவிரப்படுத்துவோம்  ’’ என்றார். ஜெய்சங்கர் பேசும் போது ‘‘இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் வளர்ந்துள்ளன. இந்த சந்திப்பு ஒரு கடினமான சூழலில் நடைபெறுகிறது’’  என்றார். உக்ரைன் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், ரஷ்யாவிடம் இருந்து  குறைந்த விலைக்கு 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்க இந்தியன் ஆயில் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி போருக்கு முந்தைய விலையில் ஒரு பீப்பாய்க்கு 35 டாலர் வரை தள்ளுபடியில் முதன்மையான கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு ரஷ்யா விற்பனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.