திருவனந்தபுரம்: கோழிக்கோடு அருகே போட்டோ ஷூட் நடத்திய போது, உறவினர்கள் முன்னிலையில் புதுமண தம்பதியினர் ஆற்றில் மூழ்கினர். இதில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார். புதுப் பெண் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கோழிக்கோடு அருகே உள்ள குற்றியாடி பாலேரி பகுதியை சேர்ந்தவர் ரெஜின்லால் (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கனிகா என்பவருக்கும் கடந்த மாதம் 14ம் தேதி திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இவர்களுக்கு திருமணத்திற்குப் பிந்தைய போட்டோ ஷூட் நடந்தது. அங்குள்ள இயற்கை எழில் சூழ்ந்த குற்றியாடி ஆற்றின் அருகே போட்டோ, வீடியோ ஷூட் நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்றும் இதே பகுதிக்கு உறவினர்களை அழைத்துக் கொண்டு போட்டோ எடுப்பதற்காக ரெஜின்லால் மனைவியுடன் சென்றார். ஆற்றுக்கு அருகில் நின்று கொண்டு அனைவரும் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக ரெஜின்லாலும், கனிகாவும் ஆற்றில் தவறி விழுந்தனர். அந்த சமயத்தில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்ததால் கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதைப்பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து கூக்குரலிட்டனர். சத்தத்தை கேட்டு அப்பகுதியினர் விரைந்து சென்று இருவரையும் மீட்டனர். ஆனால் அதற்குள் ரெஜின்லால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.கனிகாவை உடனடியாக கோழிக்கோட்டிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பேராம்பிரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
