சேலம்: பாலியல் சீண்டல்… இரட்டை அர்த்த பேச்சு – பல்கலைக்கழக உதவி பேராசிரியர் மீது மாணவி புகார்!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை இரண்டாமாண்டு படித்துவரும் மாணவி ஒருவர் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், “நான் கல்லூரி ஹாஸ்டலில் தங்கி, ஆர்ட்ஸ் குருப்பில் முதுகலை இரண்டாமாண்டு படித்து வருகிறேன். எனது துறையை சேர்ந்த உதவி பேராசிரியர் பிரேம் குமார் என்பவர் கடந்த ஒரு வருடமாக என்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தார். மேலும் என்னிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவது, தொட்டு பேசுவது என்று தவறான எண்ணத்தில் என்னை அணுகினார். இதுதொடர்பாக பல முறை அவரை எச்சரித்துள்ளேன். அதற்காக அவர் நான் படிக்க மாட்டேங்கிறேன் என்று மற்ற மாணவர்கள் மத்தியில் என்னை சாதி பெயர் கூறி இழிவாக திட்டுவார். ஒரு கட்டத்தில் நான் துறை தலைவரிடம் புகார் அளித்திருந்தேன். அவர் பிரேம் குமாரை அழைத்து கண்டித்தார்.

பெரியார் பல்கலைக்கழகம்

இந்நிலையில் தற்போது துறைத் தலைவர் இல்லாததால் அவருடைய நடவடிக்கை உச்சத்துக்கு போனது. வகுப்பில் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவது, பெண்கள் மீது கைப்போட்டு பேசுவது என்று மீண்டும் தன் வேலையை காட்ட தொடங்கினார். எனவே இவர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அப்புகாரில் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ள இருக்கின்றனர் காவல்துறையினர்.

இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் உதவி பேராசிரியர் பிரேம் குமார் மீதான புகார் குறித்து விசாரித்தோம், சமீபத்தில் கல்லூரி ஆசிரியர்களுக்குள் நடந்த மீட்டிங்கைப் பற்றி பத்திரிகைக்கு தகவல் கொடுத்து செய்தி வெளியிட்டதால், அவரை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருப்பதாக கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.