அசிங்கமான பெண்களுக்கு அழகான மாப்பிள்ளை கிடைக்கும்.. "டவுரி"யை போற்றும் நர்சிங் சிலபஸ்!!

டி.கே.இந்திராணி.. யார் இந்தப் பெண்மணி என்று தெரியவில்லை.. ஆனால் அவர் பாடத் திட்டம் என்ற பெயரில் உதிர்த்திருக்கும் முத்துக்களைப் படிக்க படிக்க வாந்திதான் வருகிறது. அந்த அளவுக்கு விஷத்தைக் கலந்து பாயாசம் என்ற பெயரில் புத்தகத்தில் கக்கி வைத்திருக்கிறார் இந்தப் பெண்.

நர்சிங் மாணவர்களுக்கான சமூகவியல் Sociology for Nurses பாடத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடப் பிரிவு தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. காரணம், வரதட்சணை முறையை போற்றி எழுதப்பட்டுள்ள பாடம் இது. அதில் இடம் பெற்றுள்ள merits and advantages என்ற தலைப்பிலான கருத்துக்கள் மிகுந்த அதிர்ச்சியைத் தருவதாக உள்ளது. வரதட்சணையைப் போற்றி அதைப் புனிதமாக பார்த்து வார்த்தைகளில் வடித்துள்ளார் இந்திராணி.

இந்தப் பாடப் பிரிவு தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் இது பெரும் அதிருப்தியையும், கண்டனத்தையும் உருவாக்கியுள்ளது. பலரும் இந்தப் பாடத்தை தடை செய்ய வேண்டும், இந்திராணி இனிமேல் எந்தப் பாடத்தையும் எழுத விடாமல் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

இந்த விவகாரம் குறித்து இதுகுறித்துக் கருத்து தெரிவிக்கையில் இதுபோன்ற கருத்துக்களை ஒருபோதும்
இந்திய நர்சிங் கவுன்சில்
ஆதரிக்காது. இந்திய நர்சிங் கவுன்சிலின் பெயரைப் பயன்படுத்தி யாரும் இதுபோன்ற பிரசாரத்தில் ஈடுபடுவதையும் அனுமதிக்க மாட்டோம். இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.

வரதட்சணை தொடர்பாக இந்திராணி உதிர்த்துள்ள முத்து்கள் இதுதான்:

1- திருமணமாகி வரும் தம்பதிக்கு புதிய வீட்டை நிர்மானிப்பதற்கு வரதட்சணை உதுவுகிறது. கட்டில், மெத்தை, டிவி, மின்விசிறி, ரெப்ரிஜிரேட்டர், சமையல் பாத்திரங்கள், துணிகள், வாகனம் போன்றவை வரதட்சணையாக தரப்படுகின்றன.

2- பெற்றோர்களின் சொத்துக்களும் வதரட்சணையாக தரப்படுகின்றன. பெற்றோரின் சொத்திலிருந்து ஒரு பகுதியை மகள்கள் வரதட்சணையாக பெறுகின்றனர்.

3- வரதட்சணை பெண்களிடையே கல்வியை பரப்ப உதவுகிறது. வரதட்சணை கொடுக்க வேண்டுமே என்ற நிர்ப்பந்தத்தை தவிர்க்க காரணமாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை நிறையப் படிக்க வைக்கின்றனர். இதனால் பெண் கல்வி அதிகரிக்கிறது. அதிகம் படித்த பெண்களிடம் வரதட்சணை கேட்பதும் குறைகிறது. இது முறைமுகமாக பெண்களுக்கு சாதகமான விஷயம்.

4- அசிங்கமான உருவம் கொண்ட பெண்கள், அதிக அளவில் வரதட்சணை கொடுக்கும்போது அவர்களுக்கு எளிதில் திருமணமாகி விடுகிறது. நல்ல அழகான மாப்பிள்ளையும் கிடைக்கும்.

இப்படி கக்கிக் கொண்டே போயிருக்கிறார் அந்த இந்திராணி.. கொடுமை!

டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்

இந்திராணியின் இந்த வரதட்சணை குறித்த பாடத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவீட்டுகளில் கூறியிருப்பதாவது:

செவிலியர் படிப்புக்கான Textbook of Sociology for Nurses என்ற நூலில் வரதட்சணையை புனிதப்படுத்தும் வகையிலான பல கருத்துகள் இடம் பெற்றுள்ளன. TK Indrani என்பவர் எழுதிய இந்த நூல் நாட்டின் பல செவிலியர் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பாட நூலாக வைக்கப்பட்டுள்ளது!

வரதட்சணை மூலம் கிடைக்கும் பொருட்கள் வீட்டை கட்டமைக்க உதவுகின்றன; மகனுக்கு கிடைக்கும் வரதட்சணையைக் கொண்டு மகளை திருமணம் செய்து கொடுக்க முடியும்; வரதட்சணை தான் மகளிர் கல்வியை ஊக்குவிக்கிறது என்பன போன்ற அந்த நூலில் உள்ள கருத்துகள் பிற்போக்கானவை!

அசிங்கமான பெண்களை கவர்ச்சிகரமான வரதட்சணை மூலம் அழகான பையனுக்கு திருமணம் செய்து வைக்க முடியும் என்று அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருப்பது பெண்களை பண்டமாக பார்க்கும் இழி செயலாகும். இந்தக் கருத்துக்கும் செவிலியர் கல்விக்கும் என்ன தொடர்பு? எனத் தெரியவில்லை!

வரதட்சணை ஆதரவு பிரச்சார அமைப்புகளில் கூட வைக்கத் தகுதியற்ற இந்த நூலை செவிலியர் படிப்புக்கான பாடமாக வைத்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. அந்த நூலை செவிலியர் படிப்புக்கான பாடத்திட்டத்திலிருந்து நீக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

அடுத்த செய்தி”பாங்கு” ஒலிக்கக் கூடாது.. புதிய போராட்டத்தைக் கையில் எடுத்த இந்துத்வா!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.