காணொலி விசாரணையின்போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட விவகாரம்: வழக்கறிஞருக்கு 2 வாரம் சிறை

சென்னை: காணொலி காட்சி விசாரணையின் போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வழக்கறிஞருக்கு இரண்டு வாரங்கள் சிறை தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற காணொளி காட்சி விசாரணையின் போது, நீதிபதி ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்து கொண்டிருக்கையில், கேமரா ஆனில் இருந்தது தெரியாமல் வழக்கறிஞர் ஒருவர்,பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காட்சிகள்,வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் பி.என் பிரகாஷ் தலைமையிலான அமர்வு, சம்மந்தப்பட்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்தது, இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும், மேலும் சம்பந்தப்பட்ட காட்சிகளை சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு இரண்டு வாரங்கள் சாதாரண சிறை தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர்.

ஏற்கெனவே இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர், 34 நாட்களாக சிறை தண்டனை அனுபவித்து வருவதால், தண்டனையை கழித்துக் கொள்ள உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுத்த சிபிசிஐடிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.