மதுரை: 2017 ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ரயிலை தடுத்து நிறுத்திய வழக்கில் 22 பேர் விடுதலை

மதுரை: மதுரை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ரயிலை தடுத்து நிறுத்திய வழக்கில் 22 பேரை விடுதலை செய்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததைக் கண்டித்து 2017-ல் தீவிர போராட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், தமுக்கம் மைதானம் உட்பட பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

அப்போது கோவையிலிருந்து மதுரை நோக்கி வந்துகொண்டிருந்த பயணிகள் ரயிலை செல்லூர் வைகை பாலத்தில் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். அந்த ரயிலை 4 நாட்களாக விடாமல் போராட்டக்காரர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். போலீஸாரின் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் சாகுல்அமீது, சதாம் உசேன், முத்துக்குமார், ராமுத்தாய், கஸ்தூரி உட்பட 22 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி நாகலெட்சுமி முன்பு இன்று நடைபெற்றது.

பின்னர், ”போதுமான சாட்சிகள் இல்லை. மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை” என்று கூறி 22 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.