இரிடியம் என சொல்லி செங்கலை கொடுத்த மோசடி கும்பல் – ரூ.30 லட்சத்தை இழந்த முதியவர்

கோவையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த முதியவரிடம், இரிடியம் என செங்கலை கொடுத்து, ரூபாய் 30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் அடையாளம் தெரியக்கூடிய 2 பேர் உட்பட சிலரை தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்தவர் மனோகரன். 60 வயதான இவருக்கு, தமுருகானந்தம், கண்ணப்பன் ஆகிய இருவர் அறிமுகமாகியுள்ளனர். தங்களிடம் இரிடியம் உள்ளதாகவும், அதனைப் பெற ரூபாய் 30 லட்சம் எடுத்துக்கொண்டு கோவை வரும்படி அவர்கள். மனோகரனிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, நேற்று முன்தினம் இரவு கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து மனோகரன் தங்கியுள்ளார். அப்போது மனோகரனின் அறைக்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள், முருகானந்தம் அனுப்பி வைத்ததாக கூறி, தாங்கள் கொண்டு வந்த பெட்டிக்குள் இரிடியம் இருப்பதாகவும், அதை உடனடியாக பார்க்காமல் சிறிது நேரம் கழித்து திறந்து பார்க்கும் படி தெரிவித்துள்ளனர்.
image
இதை நம்பிய முதியவர் மனோகரன் தான் எடுத்து வந்த 30 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். இதை பெற்றுக்கொண்ட 4 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து லாவகமாக சென்றனர். பின்னர் முதியவர் பெட்டியை திறந்து பார்த்தபோது பெட்டிக்குள் செங்கல் இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த மனோகரன் உடனடியாக சிங்காநல்லூர் காவல் நிலையம் சென்றார்.
பின்னர், ஆசை வார்த்தையை நம்பி ஏமாற்றப்பட்டது தொடர்பாக காவல்நிலையத்தில் நடந்த தகவலை தெரிவித்து, வந்தவர்களின் அடையாளம் மற்றும் பெயர்களை குறிப்பிட்டு, மனோகரன் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் முருகானந்தம், கண்ணப்பன் மற்றும் மனோகரனிடம் பணத்தை பெற்றுக்கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் விடுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.