காவல்துறையில் 90% ஊழல்வாதிகள் என்ற தனிநீதிபதியின் கருத்து திருத்தம்! சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: காவல்துறையில் 90% ஊழல்வாதிகள் என  தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி வேல்முருகன் தற்போது காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல் வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளதாகவும் 10% அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உள்ளதாக குறிப்பிட் டிருந்தார். டிஜிபி மனு ஊழல்வாதி உள்ள அதிகாரிகளை களைந்து, திறமையற்றவர்களுக்கு போதிய பயிற்சி வழங்க வேண்டிய நேரம் இது என தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது. சிலர் வரவேற்பும் பலர் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, காவல்துறையினர் மீது களங்கம் தெரிவித்துள்ள  தனி நீதிபதியின்  கருத்துக்களை நீக்கக்கோரி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று உயர்நிதிமன்ற நீதிபதி பி.என் பிரகாஷ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில்  ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து பின்பு ,வழக்கின் எல்லைக்கு அப்பாற்பட்டு, இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்து இருப்பது சட்டத்தின்படி ஏற்கத்தக்கதல்ல என்று கூறியதுடன்,  இதுபோல கருத்துக்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றக்கூடிய காவல் துறையினர் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறினார்.

மேலும்,  உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பிரதிவாதிகளாக இல்லாதவர்கள் பற்றிய கருத்துகளை தெரிவிக்க கூடாது என்பதை சுட்டிக்காட்டியவர்,  உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றங்களுக்கு வழங்கியுள்ள ஆலோசனையில் வழக்கிற்கு அப்பாற்பட்டு , சகட்டுமேனிக்கு கருத்துகளை தெரிவிக்க கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தனி நீதிபதியின் கருத்துக்களை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.