‘விராட் கோலிக்கு ஓய்வு தேவை’ – முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கருத்து

மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு எந்த ஒரு போட்டியிலும் சதம் அடிக்க முடியவில்லை. தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் கோலி, நேற்று முன்தினம் லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சந்தித்த முதல் பந்திலேயே ‘டக்-அவுட்’ ஆனார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் 7 ஆட்டங்களில் 119 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இந்த நிலையில் தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடும் 33 வயதான விராட் கோலிக்கு தற்போது ஓய்வு தேவை என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி வலியுறுத்தியுள்ளார். 
இது தொடர்பாக ரவி சாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில், “தொடர்ந்து கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் (பயோபபுள்) முடங்கி கிடப்பதால் விராட் கோலி அதிகமான அழுத்தத்தில் உள்ளார். இங்கு யாருக்காவது ஓய்வு 
தேவை என்றால் அது அவருக்குத் தான். அது இரு மாதங்களாக இருந்தாலும் சரி அல்லது ஒன்றரை மாதங்களாக
இருந்தாலும் சரி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு (ஜூலை மாதம்) பிறகு இருந்தாலும் சரி, அதற்கு முன்பாக இருந்தாலும் சரி. நிச்சயம்அவருக்கு ஓய்வு அவசியம். அவரால் இன்னும் 6-7 வருடங்கள் கிரிக்கெட் விளையாட முடியும். 
மனச்சோர்வால் கிரிக்கெட்டை விட்டு சீக்கிரம் வெளியேறும் நிலைமையை உருவாக்கி விடக்கூடாது.
சிறிது ஓய்வு எடுத்து விட்டு வந்தால் தான் அவரால் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று கருதுகிறேன். பயிற்சியாளராக இருந்தபோது நான் அவரிடம் முதலில் கூறியது என்னவென்றால், சக வீரர்கள் 
மீது கருணைகாட்ட வேண்டும். நீங்கள் எதையாவது வலுக்கட்டாயமாக திணித்தால் பிறகு அந்த வீரர் சிறப்பாக செயல்படும் தன்மையை இழந்து விடுவார். அதனால் மிகவும் கவனமுடன் செயல்படுங்கள் என்று கூறினேன்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.