இணை போக்குவரத்து ஆணையரின் காரில் இருந்து ரூ.28.35 லட்சம் பறிமுதல் – கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடவடிக்கை

கோவை: கோவை பாலசுந்தரம் சாலையில் மண்டல இணை போக்குவரத்து ஆணையரின் அலுவலகம் இயங்கி வருகிறது.

இங்கு, கோவை மண்டல இணை போக்குவரத்து ஆணையராக, சவுரிபாளையத்தைச் சேர்ந்த கே.உமாசக்தி என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் உதவியாளர் ஒருவர் மூலம் அலுவலகத்துக்கு வருபவர்களிடம் லஞ்சம் பெறுவதாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கடந்த சில நாட்களாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் இவரை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், இணை போக்குவரத்து ஆணையர் உமாசக்தி தனது காரில் நேற்று வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரைப் பின் தொடர்ந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், உமாசக்தியின் காரை ஒரு இடத்தில் வழிமறித்து திடீர் சோதனை நடத்தினர்.

காரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ஒரு பையில் ரூ.28.35 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை அழைத்துக் கொண்டு, பாலசுந்தரம் சாலையில் உள்ள அவரது அலுவலகத்துக்குச் சென்றனர். அலுவலகத்தில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர்.

மேலும், இந்தப் பணம் எப்படி வந்தது? யார் கொடுத்தது என்பன உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டு,அலுவலகத்தில் வைத்து உமாசக்தியிடம் சில மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவரால் ரூ.28.35 லட்சம் தொகைக்கான காரணத்தை தெரிவிக்க முடியாததால், அது லஞ்சமாக வாங்கிய பணம் என்பதை உறுதி செய்த அதிகாரிகள், அந்த தொகையை பறிமுதல் செய்தனர்.

ஓய்வு பெற்ற அலுவலக உதவியாளரான செல்வராஜ் என்பவரை பிரத்தியேகமாக நியமித்து, அவர் மூலம் பொதுமக்கள், தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக தனது அலுவலகத்துக்கு வரும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து உமாசக்தி, லஞ்சமாக பணத்தை வசூலித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உமாசக்தி, செல்வராஜ் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.