சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர்; அரையிறுதிக்குள் நுழைந்த மேற்கு வங்கம், கர்நாடகா அணிகள்!

திருவனந்தபுரம்,
75-வது தேசிய அளவிலான சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர், கேரள மாநிலம் மலப்புரத்தில்  நடைபெற்று வருகிறது.
சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடரில், மலப்புரம் கொட்டப்பாடி பய்யநாடு மைதானத்தில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்-ஏ பிரிவு ஆட்டத்தில், மேற்கு வங்கம்-ராஜஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. 

முக்கியமான இந்த  ஆட்டத்தில் மேற்கு வங்க  அணி, 3-0 என்ற கோல் கணக்கில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், மேற்கு வங்கம் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. 
முன்னதாக, பஞ்சாப் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு கேரளா தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. குரூப்-ஏ பிரிவில்,  4 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் கேரளா முதலிடம்  பிடித்தது. 
நேற்று இரவு நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில், ஒடிசா – சர்வீசஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இந்த குரூப்-பி பிரிவு ஆட்டத்தில், சர்வீசஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை தோற்கடித்தது. 
நடப்பு சாம்பியனான சர்வீசஸ் அணி, அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. 
இந்த தோல்வியின் மூலம், அடுத்து நடைபெற உள்ள கர்நாடகா – குஜராத் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின் முடிவை பொறுத்தே, ஒடிசா அரையிறுதிக்கு தகுதி பெறுமா என்பது தெரியவரும் என்ற நிலை இருந்தது. 
ஆனால் நேற்று இரவு நடைபெற்ற இப்போட்டியில், கர்நாடகா 4-0 ன்ற கோல் கணக்கில் குஜராத்  அணியை தோற்கடித்தது. 
இந்த வெற்றியின் மூலம், கர்நாடகா அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனால் அரையிறுதிக்கு தகுதி பெறும்  ஒடிசா அணியின் கனவு தகர்ந்தது.   
கர்நாடகா அணி அரையிறுதி ஆட்டத்தில் கேரளாவை எதிர்த்து களம் காணுகிறது. அரையிறுதிப் போட்டிகள் ஏப்ரல் 28,29 தேதிகளில் நடைபெறும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.