சீனாவை திணறடிக்கும் கொரோனா: பீஜிங்கில் 2 கோடி பேருக்கு பரிசோதனை

பீஜிங் :

சீனாவை கொரோனா வைரஸ் திணறிடித்து வருகிறது. அந்த நாட்டின் வர்த்தக தலைநகர் என்கிற சிறப்புக்குரிய ஷாங்காய் நகரில் கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கடந்த சில தினங்களாக தலைநகர் பீஜிங்கிலும் தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது. இதனால் ஷாங்காய் நகரை போல பீஜிங்கிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என அச்சம் நிலவுகிறது.

இந்த நிலையில் பீஜிங்கில் நேற்று புதிதாக 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பீஜிங்கில் உள்ள ஒரு பகுதி கொரோனாவுக்கான அதிக ஆபத்துள்ள பகுதியாகவும், மற்ற 7 பகுதிகள் நடுத்தர ஆபத்து பகுதிகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதையடுத்து, பீஜிங்கில் உள்ள சுமார் 2 கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய நகர நோய் தடுப்பு குழு நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. நேற்று முன்தினம் அங்கு ஒரே நாளில் 35 லட்சம் பேருக்கு 3 கட்ட கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஷாங்காய் நகரில் நேற்று ஒரு நாளில் மட்டும் 58 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.