புஷ்பா 2 – சம்பளத்தை உயர்த்திய அல்லு அர்ஜுன்

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த வருடக் கடைசியில் வெளிவந்த படம் 'புஷ்பா'. இரண்டு பாகங்களாக உருவாக உள்ள இதன் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு இந்த மாதமே ஆரம்பமாக வேண்டியது. ஆனால், “ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு கதையில் சில மாற்றங்களைச் செய்ய இயக்குனர் சுகுமார் முடிவு செய்தார். அதனால், படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை இன்னும் அதிக பொருட்செலவில் தயாரிக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். முதல் பாக வெற்றிக்குப் பிறகு படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் இரண்டாம் பாகத்திற்காக தனது சம்பளத்தை உயர்த்தியதாக தகவல் வெளிவந்தது. முதல் பாகத்திற்காக 35 கோடி வாங்கிய அல்லு அர்ஜுன், இரண்டாம் பாகத்திற்காக 50 கோடி கேட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது 50 கோடி அல்ல 100 கோடி வரை அல்லு அர்ஜுன் சம்பளம் கேட்பதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்குத் திரையுலகத்தில் பிரபாஸ் தவிர வேறு எந்த ஒரு ஹீரோவும் இன்னும் 100 கோடி சம்பளத்தைத் தாண்டவில்லை. இப்போது அல்லு அர்ஜுனுக்கு அந்த சம்பளம் கொடுக்கப்பட்டால் அவரும் அந்தப் பட்டியலில் சேர்வார்.

தமிழில் ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோர் 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.