ஓராண்டில் இல்லாத அளவுக்கு அந்நிய செலாவணி கையிருப்பு கரைந்தது: தங்கம் மட்டும் ஜொலிக்கிறது

புதுடெல்லி: இந்தியாவின் அந்நிய செலாவாணி கையிருப்பு தொடர்ச்சியாக 9வது வாரமாக சரிந்துள்ளது.கொரோனா பாதிப்பை தொடர்ந்து, அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதாரச் சிக்கலில் சிக்கித் தவிக்கின்றன. இதன் காரணமாக,  பாகிஸ்தானில் விலைவாசி உயர்ந்து ஆட்சி மாற்றமே நடந்துள்ளது. இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பும் தொடர்ந்து கரைந்து கொண்டிருக்கிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள கடந்த 6ம் தேதியுடனான கடைசி வார கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.13,275 கோடி சரிந்து ரூ.44.69 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஓராண்டில் இந்தியாவின் குறைந்தபட்ச அந்நிய செலாவணி கையிருப்பாகும். தொடர்ந்து 9வது வாரமாக கையிருப்பு குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி இந்திய வரலாற்றில் அதிகபட்சமாக ரூ.48 லட்சம் கோடி அந்நிய செலாவணி கையிருப்பு இருந்தது. இது படிப்படியாக குறைந்து வருகிறது. 9 வாரங்களில் சுமார் ரூ.4 லட்சம் கோடி குறைந்துள்ளது.அதே சமயம், இந்தியாவின் தங்கம் கையிருப்பு கடந்த வாரத்தை விட ரூ.10 ஆயிரம் கோடி அதிகரித்து, ரூ.3.13 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.