தாய்லாந்தில் பரத் படக்குழு மீது உள்ளூர் மக்கள் தாக்குதல்

2018ம் ஆண்டு தாய்லாந்தில் பெய்த கன மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் சுற்றுலாத்தலமான தாம் லுங் என்ற குகைக்குள் 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும், பயிற்சியாளரும் சிக்கிக் கொண்டனர். 9 நாட்களுக்கு பிறகு அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கடும் போராட்டத்துக்கு இடையில் மீட்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து மலையாளத்தில் 'ஆக்ஷன் 22' என்ற படம் தயாராகிறது. சந்திரன் திக்கோடி தயாரிக்கும் இந்தப் படத்தில் தமிழ் நடிகர் பரத் குகையில் சிக்கிக் கொண்ட சிறுவர்களின் பயிற்சியாளராக நடிக்கிறார். அவர் தவிர சபரீஷ் வர்மா, இர்ஷத், லாலு அலெக்ஸ், கலேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். லிஞ்சு எஸ்தப்பன் இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பை சம்பவம் நடந்த இடத்திலேயே நடத்த படக்குழு தாய்லாந்து சென்றது. அரசு அனுமதியுடன் குகைக்குள் படப்பிடிப்பு நடத்தி வந்தனர். ஆனால் உள்ளூர் மக்கள் தங்களுக்கு பெரும் தொகை தந்தால் தான் படப்பிடிப்பை நடத்த விடுவோம் என்று தகராறு செய்தனர். அவர்கள் கேட்ட பணமும் கொடுக்கப்பட்டது. இதை கேள்விப்பட்ட இன்னொரு தரப்பினர் தங்களுக்கும் பணம் தரவேண்டும் என்று கேட்டு படப்பிடிப்பு வாகனங்களை சேதப்படுத்தியுள்ளனர். படப்பிடிப்பு குழுவினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இது தொடர்பாக படப்பிடிப்பு குழுவினர் போலீசில் புகார் அளித்தனர். என்றாலும் இனி தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாது என்பதால் இந்தியா திரும்ப முடிவு செய்திருக்கிறார்கள். ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அரங்கம் அமைத்து படப்பிடிப்பை தொடர முடிவு செய்திருக்கிறார்கள். என்றாலும் முழுபாதுகாப்பு தருகிறோம் படப்பிடிப்பை நடத்துங்கள் என்று தாய்லாந்து சுற்றுலாத்துறை, தயாரிப்பாளரை கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.