சிபிஐ என்னிடம் தவறாக நடந்து கொண்டது!: லாலு மனைவி ரப்ரி பகீர் குற்றச்சாட்டு

பாட்னா: சிபிஐ அதிகாரிகள் என்னிடம் தவறாக நடந்து கொண்டனர் என்று லாலுவின் மனைவி ரப்ரி தேவி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது 2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவரும், பீகார் முன்னாள் பிரதமருமான லாலு பிரசாத் யாதவ், ஒன்றிய ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது, ரயில்வேயில் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக லாலுவும், அவரது குடும்பத்தினரும் நிலங்களை லஞ்சமாக பெற்றுள்ளதாக சிபிஐ புதிய வழக்குபதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக லாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் உட்பட 16 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக டெல்லி மற்றும் பீகார் மாநிலம் பாட்னா, கோபால்கஞ்ச் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். பாட்னா சர்குலர் சாலை பண்ணை வீட்டில் வசிக்கும் லாலுவின் மனைவி ரப்ரி தேவியின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுகுறித்து ரப்ரி தேவி கூறுகையில், ‘​​​​சிபிஐ அதிகாரிகள் என்னிடம் தவறாக நடந்து கொண்டனர். தகாத வார்த்தைகளை பயன்படுத்தினர்’ என்றார். இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்த காலத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் லாலு, அவரது மனைவி ரப்ரி, அவர்களது இரண்டு மகள்கள் மிசா பார்தி மற்றும் ஹேமா ஆகியோர் அடங்குவர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ரப்ரி தேவியிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்தினோம்’ என்று தெரிவித்தன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.