அருணாச்சல பிரதேசம் நம்சாய் நகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ரூ.1,000 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் பேசிய அமித் ஷா, “கடந்த 8 ஆண்டுகளில் என்ன வளர்ச்சி ஏற்பட்டுள்ளது எனக் காங்கிரஸ் தலைவர்கள் கேட்கிறார்கள். ராகுல் காந்தி தனது இத்தாலியக் கண்ணாடியைக் கழட்டி வைத்து விட்டு பார்க்க வேண்டும். அப்போதுதான், பிரதமர் மோடி செய்துள்ள வளர்ச்சிப்பணிகள் கண்ணுக்குத் தெரியும்.

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்கட்டமைப்பு மற்றும் சட்ட ஒழுங்கை வலுப்படுத்தும் விதமாக 50 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாத பணியைக் கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் போராளிக் குழுவினர் 9600 பேர் ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைந்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இடைத்தரகர்களால் மாநிலத்தின் வளர்ச்சி முடக்கப்பட்டது.

ஆனால், பிரதமர் மோடி 2014 -ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின் ஒவ்வொரு ரூபாயும் முறையாகப் பயன்படுத்தப்பட்டு ஊழலற்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத் தன்மையுடன் கூடிய இடைத்தரகர்கள் இல்லாத ஆட்சி முறையை பா.ஜ.க மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் ஆளும் அரசான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நடத்தி வருகிறது” எனப் பேசியுள்ளார்.