அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அரச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் சுற்றுநிருபம்

அரச ஊழியர்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பணிக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிருபம் இன்று (24) வெளியிடப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடி காரணமாக பொது மக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாவதனால், பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைவாக அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிருபம் இன்று (24) வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று காலை அமைச்சர் தினேஷ் குணவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், அமைச்சின் செயலாளருக்கு, நிறுவனமொன்றின் தலைவர் அல்லது திணைக்களத்தின் பிரதானிக்கு அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வதற்கு அரச சேவையில் உள்ளவர்களில் யாரை பணிக்கு அழைக்க வேண்டும் என இன்று வெளியிடப்படவுள்ள சுற்று நிருபத்தில் குறிப்பிடப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.