பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
சுமார் 25 வருடங்களாக, அரசியல் வாழ்வில் பல நிலைகளைக் கடந்து, பல்வேறு போராட்டங்களையும், சவால்களையும் சந்தித்து, சாதனைகள் பல நிகழ்த்தி தகுதியான தலைமையாக உருவெடுத்திருக்கிறார் அன்புமணி.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு மகனாக, 1968ஆம் ஆண்டு அன்புமணி பிறந்தார். சிறுவயது முதலே படிப்பில் சுட்டியாக திகழ்ந்த அவர், பத்தாம் வகுப்பு வரை ஏற்காடு மான்போர்டு மேல்நிலைப் பள்ளியில் படித்தார். 1984 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பை நிறைவு செய்த பின்னர், 1986ம் ஆண்டு திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பை நிறைவு செய்தார்.12 ஆம் வகுப்பில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய தென் ஆற்காடு மாவட்டத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். பின்னர் சென்னை மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பை நிறைவு செய்தார். கடந்த 2003ஆம் ஆண்டு லண்டனில் பொருளாதார படிப்பையும் நிறைவு செய்தார்.
படிக்கும் காலத்திலேயே மிகச் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்த அவர், மாநில அளவிலான பதக்கங்களையும் பெற்றிருக்கிறார். டென்னிஸ், ஹாக்கி, கைப்பந்து, கூடைப்பந்து, மட்டைப்பந்து போன்ற குழு போட்டிகளிலும், இறகு பந்தாட்டம், 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் நீச்சல் போன்ற தனிநபர் போட்டிகளிலும் தேர்ச்சி பெற்றவராக விளங்கினார். சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்த போது விளையாட்டுத்துறை செயலாளராகவும் பதவி வகித்த அவர், பத்து கிலோமீட்டர் அளவிலான மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்றிருக்கிறார். விளையாட்டுத்துறையில் தீரா ஆர்வம் கொண்ட அன்புமணி, தற்போது தமிழ்நாடு இறகுப்பந்தாட்ட சங்கத்தின் தலைவராகவும், இந்திய இறகுப்பந்தாட்ட சங்கத்தின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
அதேபோல சிறு வயது முதலே சமூகப்பணிகளில் ஆர்வம் கொண்ட அன்புமணி, பள்ளி, கல்லூரி காலங்களில், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை போன்ற அமைப்புகளையும் விட்டு வைக்காமல், அவற்றிலும் இணைந்து தலைமை பொறுப்பை ஏற்று சமூகச் சேவையாற்றியுள்ளார். மருத்துவ படிப்பை முடித்த அன்புமணி படிப்பை முடித்தவுடன், கிராமத்திற்கு சென்று சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் திண்டிவனம் அருகே உள்ள நல்லாவூர் கிராமத்தில் சுமார் 18 மாதங்கள் மருத்துவ பணியாற்றினார். பின்னர் சமூக சேவை பணிகளில் ஈடுபாடு கொண்ட அவர், மருத்துவர் ராமதாஸ் நிறுவிய பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக 1997 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். சுமார் 7 ஆண்டுகள் அப்பொறுப்பை அலங்கரித்தவர், அவருடைய செயல்பாட்டின் மூலம் அமைப்பினை உலகறிய செய்தார்.
அவரது தலைமையில், தமிழகம் முழுவதும் ஆயிரம் ஏரி, குளங்களை தூர்வாரினார். 50 தடுப்பணைகளையும் கட்டினார். இக்காலகட்டத்தில் 25 லட்சம் மரக் கன்றுகளையும் பசுமைத்தாயகம் அமைப்பு நட்டது. பசுமைத்தாயகம் அமைப்பு அன்புமணி தலைமையில் சிறப்பாக செயல் பட்டதன் விளைவாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கீகாரமும் கிடைக்க செய்தார். அதேபோல ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் உறுப்பினராகவும் ஆக்கினார். பசுமை தாயகம் அமைப்பின் சார்பாக, இலங்கை தமிழர்களுக்காக ஜெனிவாவில் 2013 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐநா சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.
பசுமைத்தாயகம் அமைப்பில் இணைந்து பணியாற்றியது ஆரம்பம் முதலே பாமக நடத்தும் போராட்டங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் அன்புமணி பங்கேற்க ஆரம்பித்தார். செல்லும் இடங்களில் எல்லாம் பாமக கொடியேற்றுவது போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். கட்சிக்காக அவருடைய பணிகளை பார்த்து, கட்சியினரின் வேண்டுகோளை ஏற்று 2006 ஆம் ஆண்டு பாமகவின் இளைஞரணித்தலைவராக நியமிக்கப்படுகிறார்.
இதனிடையே கடந்த 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், 35 ஆவது வயதில் மத்திய குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அவர் 2009 மார்ச் வரை அப்பொறுப்பில் இருந்தார். அவர் அமைச்சராக இருந்த காலம் இந்திய சுகாதாரத்துறையின் பொற்காலமாகவே இன்றுவரை பார்க்கப்படுகிறது. அவர் அமைச்சராக பணியாற்றிய பொழுது உலக அளவில் மிகப்பெரிய பொது சுகாதார திட்டமான தேசிய ஊரக சுகாதார இயக்கத்தினை இந்திய அளவில் தொடங்கினார். இந்த இயக்கத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட கிராமப்புற செவிலியர்களுக்கு தான், இந்தியாவில் கொரோனவை கட்டுப்படுத்தியதற்காக சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு விருது வழங்கியது என்பது இங்கே குறிப்பிடத்தக்க வேண்டிய விஷயமாகும்.
இந்தியாவில் முதன் முதலாக 108 அவசர ஊர்தித் திட்டத்தை தொடங்கினார். பொது இடங்களில் புகைபிடிக்க தடை சட்டம் இயற்றி பயன்பாட்டினைக் குறைத்தார். திரைப்படங்களில் புகை, மது காட்சிகளில் எச்சரிக்கை வாசகங்கள் வருவதையும், புகையிலை பொருட்கள் மீது எச்சரிக்கை படங்கள் போடுவதையும் கண்டிப்புடன் நிறைவேற்றும் வகையில் செயல்பட்டார். இந்தியாவில் குட்கா மற்றும் பான் மசாலாவுக்கு தடை கொண்டு வந்தார். இந்தியாவில் போலியோ நோய் முற்றிலுமாக ஒழிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுத்தார். இந்தியாவில் எச்ஐவி எய்ட்ஸ் நோயின் தாக்கம் 50 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுத்தார். உலக வங்கி உதவியுடன் ஒருங்கிணைந்த நோய்கள் கண்காணிப்பு திட்டம் தொடங்கினார். நீரிழிவு, இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களை கட்டுப்படுத்த புதிய திட்டம் வகுத்தார்.
இந்தியாவில் மருந்துகள் தயாரிப்பு கூறு சேர்க்கை மற்றும் விலை நிர்ணயங்களை முறைப்படுத்தி கண்காணிக்க ‘தேசிய மருந்துகள் ஆணையம்’ அமைத்தார். இந்திய பொது சுகாதாரத்துறை அறக்கட்டளையை ஏற்படுத்தினார். மருத்துவ ஆராய்ச்சித் துறையை புதியதாக ஏற்படுத்தினார். தேசிய நோய் கண்காணிப்பு அமைப்பை 2004ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கண்காணிப்பு ஆணையம் அமைத்தார். பாரம்பரிய அறிவுசார் எண்ணில் நூலகம் அமைத்தார். தானாக செயலிழக்கும் மருந்தேற்று குழலூசியைஅறிமுகப்படுத்தினார். தேசிய பள்ளி குழந்தைகளுக்கான மருத்துவம் திட்டத்தினை 2007ஆம் ஆண்டு தொடங்கினார். 2000 கோடி செலவில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை தன்னாட்சி அமைப்பாக மாற்றி அமைத்தார்.
மத்திய அமைச்சராக இருந்தபோது இந்தியாவிற்கு என பொதுவான பல திட்டங்களை கொண்டு வந்த அவர், தமிழகத்திற்கும் ஏராளமான முதலீட்டுடன் கூடிய திட்டங்களை கொண்டுவந்தார். அவர் தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் கீழ் 15,000 கோடி அளவிலான திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தினார். மாதர் நலன் மகப்பேறு தாய் சேய் நல அதி உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை மையத்தை சென்னையில் 100 கோடி செலவில் அமைத்தார். தாம்பரம் சானடோரியம் தேசிய சித்த மருத்துவமனை அமைத்தார். சேலத்தில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற உயர் சிகிச்சை கிடைக்க கூடிய மருத்துவமனையை ரூபாய் 139 கோடி செலவில் கொண்டு வந்தார். அதேபோல மதுரையிலும் டெல்லி எய்ம்ஸ் போன்ற உயர்தர சிகிச்சை கிடைக்க கூடிய வகையில் 150 கோடி செலவில் புதிய மருத்துவமனையை கொண்டு வந்தார்.
சென்னையில் இரத்த பிளாஸ்மா பிரிப்பு மையத்தினை ரூபாய் 250 கோடி செலவில் கொண்டுவந்தார். சென்னையில் 50 கோடி ரூபாய் செலவில் மாநகர ரத்த வங்கியையும் அன்புமணி தன் ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்தார். 800 கோடி செலவில் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி பூங்காவினை செங்கல்பட்டில் உருவாக்கினார். தமிழகம் முழுவதும் 10 இடங்களில் நெடுஞ்சாலை விபத்து காய சிகிச்சை மையத்தை செயல்படுத்தினார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் குருத்தணு ஆய்வகத்திற்கு 15 கோடி ஒதுக்கினார். சென்னையில் 112 கோடி ரூபாய் செலவில் மூத்த குடிமக்கள் மற்றும் கவனிப்பு ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கினார். காஞ்சிபுரத்தில் 45 கோடி செலவில் மண்டல புற்றுநோய் மையத்தினை உருவாக்கினார்.
மத்திய அமைச்சராக அவர் சிறப்பாக செயல்பட்டதையடுத்து, அவரை தேடி உலக அளவிலான விருதுகள் வந்து குவிந்தன. ஜெனிவாவில் 192 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கூடிய சர்வதேச சுகாதார கூட்டமைப்பு மாநாட்டை, தலைமையேற்று நடத்தி இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்தார். சர்வதேச அமெரிக்க புற்றுநோய் சங்கம் சார்பில் 2006ஆம் ஆண்டு லூதர் எல் டெர்ரி விருது வழங்கப்பட்டது. புகையிலை எதிர்ப்பிற்காக உலக சுகாதார நிறுவன விருது 2007ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. உலக சுகாதார நிறுவன தலைவரின் சிறந்த தலைமைப் பண்பிற்கான விருது 2007ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. உலக ரோட்டரி சங்கத்தின் போலியோ ஒழிப்பு சாதனையாளர் விருதும் 2007 ஆம் ஆண்டு அவருக்கு கிடைத்தது. இந்தியாவிற்கு வந்த ஐநா பொதுசெயலாளர் பான் கீ மூன், அன்புமணி செய்த சாதனைகளுக்காக அவரது அலுவலகத்திற்கு நேரடியாக வந்து சந்தித்து கௌரப்படுத்தினார்.
இந்திய அளவிலும், இந்தியாவில் போலியோ நோய் முற்றிலும் அழிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுத்ததற்காக 2014ஆம் ஆண்டில் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அன்புமணியை பாராட்டி விருது வழங்கினார். சென்னை ரோட்டரி சங்கம் சார்பில் கௌரவ மனிதருக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல டெல்லி எய்ம்ஸில் எஸ்சி எஸ்டி மாணவர்கள் இட ஒதுக்கீட்டை உறுதி செய்து கொடுத்ததை அடுத்து, எஸ்சி எஸ்டி ஆணைய தலைவர் பூட்டா சிங் அவர்களால் சமூகநீதி விருது சென்னையில் 2008ஆம் ஆண்டு மருத்துவர் அன்புமணிக்கு வழங்கப்பட்டது. ஐக்கிய முற்போக்கு ஆட்சிக்காலத்தில் தமிழக நடுவண் அமைச்சர்கள் செயல்பாடுகள் ஆய்வில் முதலிடம் பிடித்தார். தமிழன் என்று சொல்லடா என்ற விஜய் தொலைக்காட்சியின் விருதையும் அவர் பெற்றிருக்கிறார்.
அரசியல் பொறுப்புகளில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2010 வரை அப்பொறுப்பில் இருந்தார். பின்னர் 2014ஆம் ஆண்டு தர்மபுரி தொகுதியில் அதிமுக, திமுக கட்சிகளை எதிர்த்து போட்டியிட்டு முதல் முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2019ஆம் ஆண்டு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இதனிடையே 2016 ஆம் ஆண்டு அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து தமிழகம் முழுவதும் தனித்து தேர்தலை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 1997 இல் பசுமைத்தாயகம் அமைப்பின் மூலம் தொடங்கிய அவருடைய அரசியல் பயணம், கட்சியில் அடிப்படை உறுப்பினர், இளைஞரணித்தலைவர் எனத் தொடர்ந்து தற்போது கட்சியின் தலைவராக உயந்திருக்கிறார். அன்புமணி எப்பொழுதே தலைமை பொறுப்புக்கு தகுதியானவராக உருவெடுத்தாலும், பல ஆண்டுகளுக்கு பிறகே அதற்கான வாய்ப்பு கனிந்திருக்கிறது. தமிழகத்தில் அதிக அளவில் இளைஞர்களை கொண்ட கட்சியான பாமகவிற்கு அன்புமணி தலைமை பொறுப்பேற்றிருப்பது மக்களிடையே அதிக வரவேற்பையும் பெற்றுள்ளது. அன்புமணியின் தலைமையின் கீழ் புதிய எழுச்சி உண்டாகும் என்ற நம்பிக்கையும் பாட்டாளிகளுக்கு கொடுத்திருக்கிறது.