உத்தராகண்ட் இடைத்தேர்தலில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அமோக வெற்றி

டேராடூன்: கடந்த 2012 முதல் 2017 வரை உத்தராகண்ட் எம்எல்.ஏ.வாக இருந்து வந்த புஷ்கர் சிங் தாமி கடந்தாண்டு முதல்வராக நியமிக்கப்பட்டார். ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உத்தராகண்ட் சட்டப்பேரவை தேர்தலில் கதிமா தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி, காங்கிரஸ் வேட்பாளரிடம் 6,579 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஆனாலும், தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் அவரை மீண்டும் முதல்வராக தேர்வு செய்தனர்.

6 மாதத்துக்குள் புஷ்கர் சிங் தாமி எம்.எல்.ஏ.வாக வேண்டும் என்பதால், அவர் சாம்பவாட் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் நிர்மலா கதோரி என்பவர் போட்டியிட்டார். இங்கு கடந்த மாதம் 31-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

இதில் புஷ்கர் சிங் தாமி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட நிர்மலா கதோரியைவிட 55,000 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் விடுத்துள்ள செய்தியில், ‘‘உத்தராகண்ட்டின் ஆற்றல்மிக்க முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு வாழ்த்துக்கள். உத்தராகண்ட் முன்னேற்றத்துக்கு அவர் இன்னும் கடினமாக பணியாற்றுவார் என நம்புகிறேன். பா.ஜ.க மீது நம்பிக்கை வைத்த சாம்பவாட் தொகுதி மக்களுக்கு நன்றி. இடைத்தேர்தலில் பா.ஜ தொண்டர்களின் கடின உழைப்புக்கும் நன்றி’’ என குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.