சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக மிஷ்கின் – வெளியான தகவல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள ‘எஸ்.கே.22’ படத்தில், வில்லனாக இயக்குநர் மிஷ்கின் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘டான்’ வெற்றிப்படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘எஸ்.கே. 20’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை, கே.வி. அனூதீப் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் முழுப் பணிகளும் நிறைவடைந்து வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்பட உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். ‘எஸ்.கே. 21’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதையடுத்து, யோகிபாபுவின் ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

image

‘எஸ்.கே.22’ -வாக உருவாக உள்ள இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக சொல்லப்படும் நிலையில், இயக்குநர் மிஷ்கின் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ‘எஸ்.கே.21’ படத்திற்கு முன்னதாகவே, ‘எஸ்.கே. 22’ படத்தின் படப்பிடிப்புகள் துவங்கப்படலாம் என்று தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.