அமெரிக்க அதிபர் பங்களா அருகே விமானம் பறந்ததால் பரபரப்பு| Dinamalar

ரெஹோபோத் பீச் : அமெரிக்க அதிபர் தங்கியிருந்த கடற்கரை பங்களாவுக்கு மேலே விமானம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகிய இருவரும் உடனடியாக அந்த வீட்டில் இருந்து வெளியேறினர்.

அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை:அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர், வாஷிங்டன் நகரில் இருந்து 200 கி.மீ., துாரத்தில் ரெஹோபோத் கடற்கரையில் அமைந்துள்ள விடுமுறைக்கால ஓய்வு இல்லத்தில் தங்கியிருந்தனர்.நேற்று காலை அந்த வீட்டின் மேலே தனியார் விமானம் ஒன்று பறந்து சென்றது; அது, விமானம் செல்ல தடை செய்யப்பட்ட பகுதி என்பதால், அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.

அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் உடனடியாக அங்கிருந்து வேறு இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.இதற்கிடையே அதிபரின் பாதுகாப்பை கவனிக்கும் அதிகாரிகள் அந்த விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, விமானியிடம் விசாரணை நடத்தினர். தவறுதலாக ரெஹோபோத் கடற்கரை வழியாக வந்து விட்டதாக, அந்த விமானி தெரிவித்தார்.

இதையடுத்த சில மணி நேரத்தில் அதிபரும், அவரது மனைவியும் மீண்டும் கடற்கரை ஓய்வு இல்லத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதனால் வெள்ளை மாளிகையிலும் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.