கடலூரில் நீரில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழப்பு – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்

கடலூர்,

கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பகுதியில் கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தற்போது கோடை மழை பெய்ததால் இந்த தடுப்பணையில் ஓரளவு தண்ணீர் உள்ளது. எனவே இந்த தடுப்பணையில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள், சிறுமிகள் குளிப்பது வழக்கம்.

அதன்படி நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த பெண் பிரியா, மாணவிகள் மோனிசா, சங்கவி, சுமுதா, காவியா, பிரியதர்ஷிணி, நவி ஆகியோர் தடுப்பணையில் குளிக்க சென்றனர். அப்போது ஆழமான பகுதியில் இறங்கிய அவர்கள் தண்ணீரில் மூழ்கினார்கள்.

உடனடியாக ஆற்றில் மூழ்கிய 7 பேரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிறுமிகள் உள்பட 7 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “தமிழகத்தின் கடலூர் அருகே ஆற்றில் உள்ள தடுப்பணையில் மூழ்கி ஏழு பெண்கள் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சம்பவம் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.