விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் காட்டன் சேலைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 2 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆறு மாத காலமாக கடுமையான நூல் விலை ஏற்றம் காரணமாக தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பதுக்கி வைத்துள்ள பஞ்சை கண்டறிந்து சந்தைக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
இதன் காரணமாக ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி தவிக்கும் நிலை ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.