மாஸ்கோ : ”புதிய ஏவுகணைகளை மேற்கத்திய நாடுகள் வழங்கினால் உக்ரைனில்இதுவரை தாக்குதல் நடத்தாத இடங்களை குறிவைத்து தகர்ப்போம் ” என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துஉள்ளது. கடந்த பிப். 24ல் துவங்கிய இந்தப் போர் மூன்று மாதங்களைத் தாண்டியும் நீடித்து வருகிறது.உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை வழங்கி உதவி வருகின்றன. இதனால் உக்ரைனின்எதிர்தாக்குதலை சமாளிக்க முடியாமல் ரஷ்யப் படைகள் திணறுகின்றன. இந்நிலையில் நீண்ட தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கக் கூடிய ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் கூறியிருந்தார்.
இது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடன் கூறியுள்ளதாவது:
உக்ரைனுக்கு புதிய ஆயுதங்கள் வழங்குவது போரை நீட்டிப்பதாகவே அமையும். புதிய ஏவுகணைகளை மேற்கத்திய நாடுகள் வழங்கினால் உக்ரைனில் இதுவரை தாக்குதல் நடத்தாத இடங்களை குறி வைத்து தகர்ப்போம். இதற்கு முன் நடத்தாத தாக்குதல்களில் ரஷ்யப் படைகள் ஈடுபடும் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே உக்ரைனின் முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்ய படையினர் நேற்று ஏவுகணை தாக்குதல்களை நடத்தினர். இதில் உக்ரைன் தரப்பில் பலத்த சேதம் ஏற்பட்டது.
Advertisement