நீலகிரியை போன்றே தமிழகம் முழுவதும் ஏன்..? – மதுபாட்டில்கள் குறித்து நீதிமன்றம் கேள்வி

நீலகிரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வன பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மலை வாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்றுவிட்டு, பின் பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும்போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் என யோசனை தெரிவித்தது. பாட்டில்களை வனப்பகுதியில் வீசுவதால் விலங்குகள் பாதிக்கப்படுவதை தடுக்க இது சம்பந்தமாக திட்டம் வகுக்க வேண்டும் எனவும், தவறினால் மலை வாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என நீதிமன்றம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறுவதாகவும் மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
image
இதையடுத்து நீதிபதிகள், இந்த திட்டத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து வனப்பகுதிகள் மற்றும் மலைவாசஸ்தலங்களில் ஏன் அமல்படுத்தக்கூடாது என்ற கேள்வியை முன்வைத்தனர். மேலும் நீலகிரி மாவட்ட ஆட்சியரும், டாஸ்மாக் மேலாளரும் அதிரடி சோதனை மேற்கொள்ளுமாறும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். தற்போதுதான் நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அந்நிய நாட்டு மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும், ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தி விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர். தொடர்ந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.