காஷ்மீரில் தீவிரவாதிகளை சுற்றி வளைத்து ராணுவம் துப்பாக்கிச் சூடு: 10 மணி நேர சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை..!

புல்வாமா: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற கடும் துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். புல்வாமா மாவட்டத்தில் உள்ள திராத்கம் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து நேற்று மாலை பாதுகாப்பு படையினரும், காவல்துறையினரும் அந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கட்டிடம் ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இது தரப்பினர் இடையே விடிய விடிய துப்பாக்கிச் சண்டை நீடித்தது. சுமார் 10 மணி நேரம் நீடித்த சண்டையில் லஷ்கர் -இ– தொய்பா அமைப்பை தேர்ந்த 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டுக் கொன்றது. கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கடந்த மாதம் காவலர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. மற்ற  2 தீவிரவாதிகளை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் பதுங்கியிருந்த கட்டிடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்களும் வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.