விமானத்தில் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக கோஷமிட்ட காங்கிரஸார் – கேரளாவில் நடந்தது என்ன?!

கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக (யு.ஏ.இ) தூதரக பார்சல் மூலம் ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல் வழக்கில், முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பிருப்பதாக, சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளிவந்த ஸ்வப்னா சுரேஷ் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பினராயி விஜயன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கேரள காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. இந்த நிலையில், நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் பயணம் செய்தார். அப்போது ​​இரண்டு காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் விமானத்திற்குள் சறிது நேரம் பதற்றம் நிலவியது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், இரண்டு காங்கிரஸ் தொண்டர்களில் ஒருவர் கருப்பு சட்டை அணிந்துள்ளார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் கேரள முதல்வர் பினராயி விஜயனை நோக்கி பதவி விலகவேண்டும் எனக் கோஷமிட்டனர். அப்போது ஆளும்கட்சி நிர்வாகி ஒருவர் அவர்களை தள்ளிவிடுவதாகவும் காட்சிகள் இருந்தது.

இந்த சம்பவம் குறித்து எல்.டி.எஃப் அமைப்பாளரும், சி.பி.ஐ.(எம்) மூத்த தலைவருமான ஈ.பி.ஜெயராஜன், “விமானத்தின் முன்புறத்தில் அமர்ந்திருந்த இருவரும் குடிபோதையில் இருந்துள்ளனர், விமானம் தரையிறங்கியதும், அனைவரும் இறங்கத் தயாரானதும் முதல்வர் நோக்கி நடந்து வந்தவர்களை நான் தான் விலக்கினேன். இது பயங்கரவாத நடவடிக்கையாகும்.

ஈ.பி.ஜெயராஜன்,

பயங்கரவாத குழுக்களின் வழிமுறையைப் பின்பற்றும் அளவுக்குக் காங்கிரஸ் வீழ்ச்சியடைந்துள்ளது. இதுபோன்ற பயங்கரவாதிகளுடன் காங்கிரஸ் உலா வருவதாகக் கூறப்படும்போது, ​​முதல்வரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை அனைவரும் விமர்சிக்கிறார்கள். ஒரு மாநிலத்தின் முதல்வரால் விமானத்தில் நிம்மதியாகப் பயணிக்க முடியாதது துரதிர்ஷ்டவசமானது. காங்கிரஸால்தான் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.