விமர்சிப்பவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள் – கோலிக்கு கபில் தேவ் அறிவுரை

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சதமடித்து 2 ஆண்டுகள் கடந்துவிட்டது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல போட்டிகளில் பூர்த்தி செய்யவில்லை. பெரிய ரன்கள் குவிக்க தவறிவரும் விராட் கோலி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் விராட் கோலி குறித்து பேசியுள்ளார். ஒரு வீரர் சரியாக விளையாடவில்லை என்றால் அவரின் செயல்திறனைக் கேள்விக்குட்படுத்தும் உரிமை முன்னாள் வீரராக தனக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.

விராட் கோலி குறித்து கபில் தேவ் பேசியதாவது :

கோலி அளவுக்கு நான் கிரிக்கெட் விளையாடியதில்லை. ஆனால் சில சமயங்களில் நீங்கள் போதுமான கிரிக்கெட் விளையாடாமல் இருக்கலாம். ஆனால் ஒரு வீரரின் ஆட்டம் குறித்து பேச நிறைய விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டியது இல்லை.

நாங்கள் கிரிக்கெட் விளையாடி உள்ளோம்., நாங்கள் விளையாட்டைப் புரிந்து கொண்டுள்ளோம். நீங்கள் ரன்கள் எடுக்கவில்லை என்றால், ஏதோ தவறு இருப்பதாக நாங்கள் உணர்வோம். நாங்கள் உங்கள் செயல்திறனை பார்க்கிறோம். நீங்கள் சிறந்த திறனை வெளிப்படுத்தவில்லை என்றால் மற்றவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். உங்கள் பேட்டிங் மற்றும் உங்கள் விளையாட்டு திறன் தான் பேச வேண்டும் வேறு எதுவும் இல்லை. விராட் கோலி போன்ற ஒரு பெரிய வீரர் இப்படி சதம் அடிக்க சிரமப்படுவது மிகவும் வேதனையாக உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.