அ.தி.மு.க-வில் இருந்து ஓ.பி.எஸ் நீக்கம்: பொதுக் குழுவில் சிறப்பு தீர்மானம்

அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து, ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கி, அதிமுக பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் ஏற்கெனவே திட்டமிட்டபடி, சென்னை, வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் தொடங்கியது. இதில் பங்கேற்கும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு RFID தொழில்நுட்பத்துடன் அதிநவீன அடையாள அட்டை வழங்கப்பட்டது.

முன்னதாக, அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கேட்டு ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரத்துக்கு இபிஎஸ் வந்தார். அங்கு  அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

கூட்டம் தொடங்கிய உடனேயே அதிமுகவில் இரட்டை தலைமை பதவியை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் நியமிக்கப்பட்டார்.

4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்கவும், தேர்தல் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமனை நியமித்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், அதிமுக கொள்கை, கோட்பாடுகளுக்கு விரோதமாக செயல்பட்டதால், கழக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக, அதிமுக பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது ஓ.பி.எஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இன்று காலையில், ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் நிகழ்ந்தது. இதில் இரு தரப்பினரும், ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு பதற்றத்தை தணிக்க அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். இந்த மோதலில் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த பரப்பான சூழலில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சூழ கட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்றார்.

இதனிடையே, அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி, கே.பி முனுசாமி நீக்கப்படுவதாக, ஓபிஎஸ் தலைமை அலுவலகத்தில் வைத்து அறிவித்துள்ளார்.

இப்படி இ.பி.எஸ், ஓ.பி.எஸ் மாறிமாறி, கட்சி பொறுப்பில்  இருந்து ஒருவரையொருவர் நீக்குவதாக அறிவித்துள்ளனர். இதனால், கட்சியில் மோதல் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.