
சிவாஜியாக மாறிய மம்முட்டி
ஒரு பக்கம் போலீஸ், இன்னொரு பக்கம் மிகப்பெரிய கேங்ஸ்டர் என மாறி மாறி நடித்துவந்த மம்முட்டி இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கிராமத்து நாடக நடிகனாக, கட்டாந்தரையில் வெறும் கைகளை தலைக்கு வைத்து தூங்கும் சாதாரண மனிதனாக நடித்துள்ள படம் நண்பகல் நேரத்து மயக்கம். மலையாளத்தில் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் பள்ளிசேரி என்பவர்தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகிவரும் இந்த படம் நாடகத்தை பின்னணியாக கொண்டு உருவாகி வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாவது டீசர் வெளியானது. இந்த டீசரில் ஒரு கிராமப்புற ஹோட்டல் ஒன்றில் சுற்றிலும் பல பேர் இருக்க, நடுவில் இருக்கும் மம்முட்டி, பின்னணியில் ஒலிக்கும் கவுரவம் படத்தில் நடிகர் சிவாஜியின் இரண்டு கதாபாத்திரங்களும் வசனங்களால் மோதிக்கொள்ளும் காட்சியில் அந்த இரண்டு கதாபாத்திரங்களாகவே மாறி இமிடேட் செய்யும் விதமாக நடித்துள்ளார். இது மம்முட்டி ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், சிவாஜி ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.