ஜெய்ப்பூர்: நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த, பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்யக் கோரி நாடு முழுவதிலும் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அஜ்மீர் நிஜாம் கேட் பகுதியில் சுமார் 3 ஆயிரம் பேர் திரண்டிருந்த கூட்டத்தில் தர்கா மதபோகர் சையது கோஹர் சிஸ்டி பேசினார். நுபுர் சர்மாவின் தலையை கொண்டு வருவோருக்கு தனது வீட்டை பரிசாக வழங்குவதாக அப்போது அவர் கூறினார்.
இது தொடர்பாக சிஸ்டி மீது தர்கா காவல் நிலைய போலீஸார் கடந்த ஜூன் 25-ம் தேதி வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பஜாரில் பதுங்கியிருந்த சிஸ்டியை தெலங்கானா காவல்துறை உதவியுடன் ராஜஸ்தான் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் சிஸ்டியுடன் அவருக்கு அடைக்கலம் அளித்த முனாவர் என்பவரையும் கைது செய்தனர். வளையல் வியாபாரியான முனாவர் அஜ்மீர் தர்காவுக்கு அடிக்கடி சென்று வருபவர் ஆவார்.