முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினிக்கு ஏழாவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நளினி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் தனி சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது தாயார் பத்மாவதி உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கண்காணித்துக் கொள்ள தனக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார்.
இதனை ஏற்று நளினிக்கு கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் ஒரு மாத காலம் பரோல் வாங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. பரோலில் வெளியே வந்த நளினி காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்திலுள்ள உள்ள உறவினர் வீட்டில் தங்கி தனது தாயாரை கவனித்து வருகிறார். தொடர்ந்து ஆறு முறை நளினிக்கு பரோல் நீட்டிக்கப்பட்ட நிலையில், அவர் நாளை சிறைக்கு திரும்ப வேண்டியிருந்தது.
இந்நிலையில், தனது உடல் நிலையை காரணம் காட்டி அவரது தாயார் பத்மாவதி, நளினிக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அளித்தார். அவரது கோரிக்கையை ஏற்று நளினிக்கு ஏழாவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.