பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை; பின்தொடர்ந்து வந்து இளைஞன் தொல்லை கொடுத்ததால் விபரீதம்

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டம் சங்ஹர்ஹி அருகே உள்ள சண்டெ கிராமத்தை சேர்ந்த பிளஸ் 1 மாணவியை அதே கிராமத்தை சேர்ந்த சஞ்சய் என்ற இளைஞன் பல நாட்கள் பின் தொடந்து வந்துள்ளான். மாணவி பள்ளிக்கு செல்லும்போதும், வீடு திரும்பும்போது சஞ்சய் பின் தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்துள்ளான்.

தன்னை பின் தொடரவேணாம் என மாணவி எச்சரித்தபோதும் சஞ்சய் தனது செயலில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளான். மாணவியின் பெற்றோரும் சஞ்சயை எச்சரித்துள்ளனர்.

ஆனால், அனைவரின் எச்சரிக்கையும் மீறி சஞ்சய் அந்த மாணவியை தொடர்ந்து பின் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளான்.

இந்நிலையில், சஞ்சய் பின் தொடர்வதால் பல நாட்களாக மன உளைச்சலில் இருந்த பள்ளி மாணவி நேற்று மாலை தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பெற்றோர், உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.