பொருளாதார பாதை திட்ட சர்ச்சை சீனா, பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: சீனா, பாகிஸ்தான் இடையே பல கோடி செலவில் பொருளாதார பாதை அமைக்கப்படுகிறது. இதற்கு சிபிஇசி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து கடந்த 2013ல் தொடங்கின.  இதற்கான பாதை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்வதால், இத்திட்டத்திற்கு இந்தியா ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இந்நிலையில், சிபிஇசி திட்டத்தின் செயற்குழு கூட்டம் காணொலி மூலம் நடந்தது. இதில், சிபிஇசி திட்டத்தில் விருப்பமுள்ள 3ம் தரப்பு நாடுகளும் இணையலாம் என சீனாவும், பாகிஸ்தானும் அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு ஒன்றிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்திய பகுதியில் நடைமுறைப்படுத்தப்படும் சிபிஇசி திட்டத்தை இந்தியா உறுதியாகவும், தொடர்ச்சியாகவும் எதிர்க்கிறது. பிற நாடுகளும் பங்களிப்பை ஊக்கும் நடவடிக்கையில் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டில் நேரடியாக தலையிடுவதற்கு சமமாகும்,’ என எச்சரித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.