புதுடெல்லி: கடந்த 25-ம் தேதி மக்களவையில் பதாகைகளுடன் போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்பிக்கள் 4 பேர் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த 26-ம் தேதி மாநிலங்களவையில் 19 எம்பிக்கள், ஒரு வாரம் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே 50 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் மாநிலங்களவையில் விதிகளை மீறியதாக ஆம் ஆத்மியை சேர்ந்த சுஷில் குமார் குப்தா, சந்தீப் குமார் பதக், சுயேச்சை எம்பி அஜித் குமார் பூயான் ஆகிய 3 எம்பிக்கள் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த வாரம் முழுவதும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் இதுவரை மக்களவை, மாநிலங்களவை சேர்ந்த 27 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.