சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்வில் திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் உரையாற்றியது அனைத்து தரப்பினரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிரதமரின் வாடிக்கை
தமிழகத்துக்கு வரும்போது மட்டுமின்றி, மக்களிடையே உரையாற்றும்போதும் அந்தந்த சூழலுக்கு ஏற்ப திருக்குறளை தனது உரையின் முக்கிய அங்கமாக சேர்ப்பதை பிரதமர் நரேந்திர மோடி வாடிக்கையாக வைத்துள்ளார்.
அந்த வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடக்கிவைக்க நேற்று சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, விழாவில் சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில், ‘இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு’ என்னும் குறளை மேற்கோள் காட்டி பேசினார்.
வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்வதற்காகத்தான் என்பதே இந்த குறளுக்கான பொருள்.
விருந்தோம்பல் முறை
உலகளவில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் செஸ் போட்டியில் பங்கேற்க தமிழகத்துக்கு வந்துள்ளனர். இந்தத் தருணத்தில் நமது விருந்தோம்பல் முறை குறித்து திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் பேசி பெருமைப்படுத்தியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.