புதுடெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்வது உட்பட அமலாக்கத் துறைக்கு கூடுதல் அதிகாரம் வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது. இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சுமார் 250 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை ஒன்றாக விசாரித்த நீதிமன்றம், அந்த சட்டம் செல்லும் என கடந்த ஜூலை 27-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 17 கட்சிகள் சார்பில் நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் எவ்வித ஆய்வும் செய்யாமல் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இதை நிதி சட்டமாக இயற்றி இருக்க வேண்டும். எனவே, இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த சட்டத் திருத்தம் செல்லும் என தீர்ப்பு வழங்கி உள்ளது. இது அபாயகரமானது. நீண்டகால அடிப்படையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இந்த சட்டத்தை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த அபாயகரமான தீர்ப்பு ரத்து செய்யப்படும் என்று நம்புகிறோம்” என கூறப்பட்டுள்ளது.