"நாட்டுக்காக விளையாடுங்கள் என வீரர்களிடம் பிச்சையா எடுக்க முடியும்"- வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் வேதனை

போர்ட் ஆப் ஸ்பெயின்,

உலகம் முழுவதும் 20 ஓவர் மற்றும் 10 ஓவர் லீக் போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துவிட்டது. குறிப்பாக ஐபிஎல் தொடருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்புக்கு பிறகு பல நாடுகள் இது போன்ற லீக் தொடரை நடத்தி வருகின்றனர்.

இது போன்ற கிரிக்கெட்டுகளை நடத்துவதால் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற கிரிக்கெட் அணிகளுக்கு பாதிப்பு இல்லை. ஆனால் இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் தேசிய கிரிக்கெட் அணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் டி20 ஜாம்பவான்கள் ஆந்த்ரே ரஸல், நரேன் போன்றோர் தேசிய அணிக்காக விளையாட தயாராக இல்லாமல் டி20 லீக் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இது போன்ற 20 ஓவர் லீக் போட்டிகளில் அவர்களுக்கு அதிக ஊதியம் கிடைப்பதே அதற்கு காரணம்.

இது போன்ற நிலைமை குறித்து வேதனை தெரிவித்துள்ள மே.இ.தீவுகளின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ், “இது மிகவும் புண்படுத்துகிறது. இதை வேறு வகையில் எப்படி தெரிவிப்பது என்று தெரியவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடும்படி அவர்களிடம் பிச்சை எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.. வெஸ்ட் இண்டீஸுக்கு ஆட வேண்டும் என்றால் அவர்கள்தான் அணி நிர்வாகத்துக்கு தாங்கள் தயாராக இருப்பதை அறிவிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.