காசோலை மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை ஜீவிதா

திருப்பதி: காசோலை மோசடி வழக்கில் நடிகை ஜீவிதா ராஜசேகர் ஆந்திர மாநிலம், நகரி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

‘கருட வேகா’ எனும் தெலுங்கு படத்தில் நடிகர் ராஜசேகர் கதாநாயகனாகவும், ஸ்ரத்தா தாஸ் ஜோடியாகவும் நடித்திருந்தார். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை, ஆந்திர மாநிலம், நகரி அருகே உள்ள மகாராஜபுரம் சாய் சக்தி பொறியியல் கல்லூரியின் நிறுவனர் கோட்டீஸ்வர ராஜு வின் மனைவி வேமு ராஜு தயாரித்திருந்தார். இவருக்கு நடிகை ஜீவிதா ராஜசேகர் ரூ.26 கோடிக்கு 2 காசோலைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

மேலும் தனக்கு அடமானம் வைத்த சொத்துகளையும் தமக்கு தெரியாமலேயே விற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

அந்த காசோலைகளில் பணம் இல்லாமல் திரும்பி வந்ததால், வேமு ராஜு தரப்பில் திருவள்ளூர் மற்றும் நகரி நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் நேரில் ஆஜராகும்படி ஜீவிதா ராஜசேகருக்கு 4 முறை சம்மன் அனுப்பப்பட்டது. அவர் ஆஜர் ஆகாததால் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் ஜீவிதா மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பாக ஜீவிதா நேரில் ஆஜராகியே தீர வேண்டுமென எதிர்தரப்பு வழக்கறிஞர் முரளிதர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், ஜீவிதா ராஜசேகர் தனது வழக்கறிஞர் முருகனுடன் நகரி நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். பின்னர், அவர் மீதான பிடிவாரன்ட் ரத்து செய்யப்பட்டது. வழக்கை செப்டம்பர் 19-ம் தேதிக்கு தள்ளி வைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.