சென்னை: அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதுவரை 5 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் முடித்துள்ள அவர், சுதந்திர தினத்துக்குப் பிறகு மீண்டும் திருச்சி மற்றும் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை தொடர இருக்கிறார்.
இந்நிலையில், முன்னாள் முதல்வரான அவருக்கு சுற்றுப் பயணத்தின்போது போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சேலத்தைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஏ.பி.மணிகண்டன், சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
அதில், “அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நபர்களாலும், ஏனைய சமூக விரோதிகளாலும் பழனிசாமி உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே, அவரது பாதுகாப்பை அதிகரித்து, உச்சபட்ச போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.