மாமியார் – கணவரின் அத்தை மகள் கூட்டணி, சீண்டப்படும் நான், பதிலடி கொடுப்பது எப்படி? #PennDiary79

நான், கணவர், இரண்டு குழந்தைகள் என மகிழ்ச்சியான குடும்பம். மாமியார், மாமனாருடன் கூட்டுக் குடும்பமாக வசிக்கிறோம். கணவர் மிகவும் அன்பானவர். இப்படி எல்லாம் நிம்மதியாக இருக்கும் என் வாழ்வில், என் நிம்மதியைக் குலைப்பதற்காகவே இப்போது கூட்டணி வைத்திருக்கிறார்கள் என் மாமியாரும், கணவரின் அத்தை மகளும்.

Happy Family

என் மாமியாருக்கும் எனக்கும், வழக்கமாக எல்லா மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையில் இருக்கும் சின்னச் சின்ன சண்டைகள், உரசல்கள், போட்டிகள் என்று இருக்கும். இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு முன், எங்கள் வீட்டுக்கு அருகில் குடி வந்தார் கணவரின் அத்தை மகள். பத்து வருடங்களுக்கு முன், அவருக்கும் என் கணவருக்கும் திருமணம் செய்ய இரண்டு குடும்பங்களும் விரும்பியிருக்கிறார்கள். ஆனால், ஜாதகம் பொருந்தாததால் அது முடியவில்லை. பின்னர், என்னைப் பெண் பார்த்து முடித்தனர். அவர் அத்தை மகள், எனக்கும் என் அப்பா வழி சொந்தம். எனவே, அந்தப் பெண்ணுக்கு என்னை சிறு வயதிலிருந்தே நன்றாகத் தெரியும்.

பின்னர், என் கணவரின் அத்தை மகளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்து, இப்போது ஒரு குழந்தையுடன் சந்தோஷமாக இருக்கிறார். என்றாலும், ஜாதகம் பொருந்தாததால் என் கணவரை திருமணம் செய்துகொள்ள முடியாமல் போய்விட்டதே என்ற எண்ணம் அவருக்கு இப்போதும் உண்டு. ஆனால், என் கணவருக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை. அவருக்கு நான்தான் எல்லாம்.

Sad woman(Representational image)

இந்நிலையில்தான், சமீபத்தில் எங்கள் வீட்டுக்கு அருகில் குடி வந்தது கணவரின் அத்தை மகளின் குடும்பம். அதிலிருந்து அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து செல்வார் அந்தப் பெண். அப்போது எல்லாம் என் மாமியார், `உன்னைத்தான் என் பையனுக்குக் கல்யாணம் பண்ண நினைச்சோம், ஜாதகம் பொருந்தாம போச்சு’ என்று அதை வருத்தமாகப் பெருமூச்சுடன் சொல்வார். இருவரும் சேர்ந்து அதை அவ்வப்போது என்னிடமும் சொல்வார்கள். எனக்குக் கோபமாக, எரிச்சலாக வரும்.

என் மாமியாருக்கு என் மீது இருக்கிற சின்னச் சின்ன வெறுப்பும், கணவரின் அத்தை மகளுக்கு என் மீது இருக்கும் பொறாமையும், அடுத்தடுத்த மாதங்களில் இருவரையும் வலுவான கூட்டணி அமைக்க வைத்தது. என்னை வெறுப்பேற்றுவதை இருவரும் தொடர்ந்து செய்து வந்தார்கள். மேலும், அந்தப் பெண் என் அப்பா வீட்டுக்கும் சொந்தம் என்பதால், என் அப்பா வீட்டில் நடக்கும் விஷயங்களை எல்லாம் அவர் என் மாமியாரிடம் சொல்ல ஆரம்பித்தார். அது என் மாமியாருக்கு பெரிய தீனியாகவும், `உன் வீட்டுல இத்தனை பிரச்னைகள் எல்லாம் நடந்திருக்கா, நடந்திட்டிருக்கா…?’ என்று என்னை ஏளமாக நினைப்பதற்குக் காரணங்களாகவும் பயன்படுகின்றன. மேலும், நான் எங்காவது வெளியில் செல்கிறேன், அல்லது ஊருக்குச் செல்கிறேன் என்றால், உடனே என் மாமியார் போன் பண்ணி அந்தப் பெண்ணை வீட்டுக்கு வரச்சொல்லி, நான் இல்லாதபோது இருவரும் என்னைப் பற்றி வண்டி வண்டியாகப் புறணி பேசி மகிழ்கிறார்கள்.

sad woman

இதையெல்லாம் என் கணவரிடம் சொன்னால், ’‘அப்படியெல்லாம் நினைக்காத. அவங்க உன்னை பத்திதான் பேசுறாங்கனு உனக்கு எப்படித் தெரியும்? ஒருவேளை, அந்தப் பெண்ணை எனக்கு கல்யாணம் பேசினதால உனக்கு அடிப்படையிலேயே அவளை பிடிக்காமப் போயிருக்கும். அதுதான் உன்னை இப்படியெல்லாம் யோசிக்க வைக்குது. இன்னொரு பக்கம், அப்படியே நீ சொல்றது உண்மையா இருந்தாலும், அவங்க ரெண்டு பேரும் என்ன பேசினா, என்ன பண்ணினா என்ன? விட்டுத் தள்ளு. எனக்கு நீ மட்டும்தான்’’ என்கிறார்.

எல்லாவற்றையும், எல்லோரையும் நேர்மறையாகவே பார்க்கும் என் கணவரின் மனசு எனக்குப் புரிகிறது. ஆனால், என் மன உளைச்சலை நான் என்ன செய்வது? எனக்கு இந்த மன உளைச்சலை ஏற்படுத்தி வரும் மாமியார் – கணவரின் அத்தை மகள் கூட்டணிக்கு எப்படி பதிலடி கொடுப்பது?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.