முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: சிறப்பு அலுவலர் நியமனம்!

முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக ஐ.ஏ.எஸ் அதிகாரி இளம்பகவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும், தமிழ்நாடு முதலமைச்சர்

7.5.2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அதன் தொடர்ச்சியாக மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படும், 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 தொடக்கப் பள்ளி (1 முதல் 5ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை 2022-2023-ஆம் ஆண்டில் முதற்கட்டமாகச் செயல்படுத்திட, ரூ.33.56 கோடி (ரூபாய் முப்பத்து மூன்று கோடியே ஐம்பத்து ஆறு இலட்சம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்து கடந்த ஜூலை மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

நாட்டிலேயே முன்னோடியாக அறிமுகப்படுத்தப்படும் இத்திட்டம், “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ்., நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சிறப்பு அலுவலராகவும் இளம் பகவத் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.