தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலம் பிஎஸ்டிஎம் சான்றிதழ் விநியோகிக்கும் பணி தீவிரம்: முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலம், தமிழ் வழியில் படித்தமைக்கான பிஎஸ் டிஎம் சான்றிதழ்கள் வழங்கும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் இ-சேவை மையங்கள் மூலம், பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தற்கான (பிஎஸ்டிஎம்) சான்றிதழ் பெறும் சேவையை பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, இ-சேவை மையங்கள் மூலம் இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் மின்னஞ்சல் மூலம், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்விஅதிகாரிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப் பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குப் பகிரப்படும். பள்ளியில் பராமரிக்கப்படும் பதிவேடுகளின் அடிப்படையில் விண்ணப்பங்களின் நம்பகத் தன்மையை தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து, உறுதிசெய்ய வேண்டும். அதன் பின்னர், தகுதியானவர்களுக்கு மட்டும் பிஎஸ்டிஎம் சான்றிதழ் வழங்கலாம்.

ஒருவேளை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால், அதற்குரிய காரணத்தை தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்.

அதேபோல, அனைத்து முதன்மைக்கல்வி அதிகாரிகளும், அந்தந்த மாவட்ட எமிஸ் ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து செயல்படவும், பணிகளை ஆசிரியர்கள் சிறப்பாக மேற்கொள்வதைக் கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், பிஎஸ்டிஎம் சான்றிதழ் வழங்கும் பணிகளைத் துரிதப்படுத்தவும், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்களும் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு இது தொடர்பான வழிகாட்டுதல்களை தவறாமல் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.