மருத்துவ தம்பதியின் பலே ஐடியா! மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த வேட்டவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் எழிலரசன் இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருந்தியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை பலராமன், தாயார் கோவிந்தம்மாள், இவரது தந்தை பல வருடங்களாக வேட்டவலம் கிராமத்திலேயே அன்பு மெடிக்கல் என்ற பெயரில் மருந்து கடை ஒன்றை நடத்தி வருகிறார். எழிலரசன் கடந்த 10 ஆண்டுகளாக அதே கிராமத்தில் உள்ள வசந்தா என்பவரை காதலித்து வந்துள்ளார். வசந்தா தனியார் செவிலியர் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். 

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி வேட்டவலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பெற்றோர்களுடைய அனுமதியோடு திருமணம் நடைபெற உள்ளது. இதனையொட்டி மணமக்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுக்கக்கூடிய திருமண அழைப்பிதழை மாத்திரை அட்டை வடிவில் வடிவமைத்துள்ளனர். வித்தியாசமாக யோசித்து வடிவமைக்கப்பட்ட மாத்திரை அட்டை வடிவில் அச்சடிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மாப்பிள்ளை எழிலரசன், மணமகள் வசந்தா ஆகியோர் வித்தியாசமான அழைப்பிதழை அனைவருக்கும் வழங்க வேண்டும் என மூன்று ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்துள்ளனர். குறிப்பாக மாத்திரை அட்டை வடிவில் வர வேண்டும் என முடிவெடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக மனிதனுக்கு அவ்வப்போது வரக்கூடிய உபாதைகளை தீர்க்கும் வகையில் ஒரு மாத்திரையை தேர்வு செய்ய வேண்டும் என எண்ணிய தம்பதி, அசிக்லோபெனாக் (ACECLOFENAC) என்ற மாத்திரை அட்டையை கடைசியாக தேர்வு செய்துள்ளனர். தற்போது அந்த மாத்திரையின் அட்டை வடிவில் திருமண அழைப்பிதழை வடிவமைத்துள்ள அவர்கள்,  உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து திருமணத்துக்கு அழைத்து வருகின்றனர்.

அசிக்லோ பெனாக் பாராசிட்டமல் மாத்திரை எவ்வாறு ஜுரம் வலி போன்ற நிவாரணிகளை குணப்படுத்துகிறதோ, அது போன்று வாழ்க்கையில் அனைத்து இன்ப துன்பங்களையும், லாப நஷ்டங்களையும், நன்மை தீமைகளையும் உணர்ந்து விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்திலேயே இது போன்ற திருமண அழைப்பிதழ் அட்டையை அவர்கள் தயார் செய்துள்ளனர்.

வழக்கமாக மாத்திரை அட்டையின் பின்புறம் மருந்தின் பெயர், மருந்தின் அளவு, தயாரிப்பு இடம், காலாவதி தேதி ஆகியவை இடம் பெற்று இருக்கும்.  அதை மாற்றி மருந்தின் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் மணமகன்-மணமகள் பெயருடன் திருமண நாளான செப்டம்பர் 5 ஆம் தேதியை அச்சிட்டுள்ளனர். மாத்திரை மூலப் பொருட்கள் இருக்க வேண்டிய இடத்தில் திருமண ஜோடியின் பெயரும் அவர்களது கல்வி, வேலை விவரங்களையும் குறிப்பிட்டுள்ளனர், மாத்திரை தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் பெற்றோர்களின் பெயர் மற்றும் முகவரியை குறிப்பிட்டுள்ளனர். பக்கவாட்டில் நீல நிறத்தில் திருமண நாள் வரவேற்பு நாள் ஆகிய விபரங்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் எச்சரிக்கை என குறிப்பிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தவறாமல் திருமணத்திற்கு வர வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளனர். பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ள இந்த திருமண அழைப்பிதழ் facebook, whatsapp, twitter, instagram போன்ற சமூக வலைதளங்களில் பலரும் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.