மதுரை: மதுரையில் மாபெரும் புத்தக கண்காட்சி தமுக்கம் அரங்கில் செப். 2-இல் தொடங்கும் என மதுரை ஆட்சியர் அனீஷ்சேகர் தகவல். இது தொடர்பாக மதுரை ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
“மதுரையில் கடந்த 2005 முதல் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் சங்கம் சார்பில், ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடக்கிறது. தமிழக முதல்வர் புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில், செப்., 2ம் தேதி முதல் 12ம் தேதி வரை அனைத்து நாட்களிலும், மதுரை தமுக்கம் கலை அரங்கில் மாபெரும் புத்தக கண்காட்சி நடக்கிறது.
காலை 11 முதல் இரவு 9 மணி வரை நடக்கும், இந்த புத்தக கண்காட்சியில் புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் சார்பில், ஏறக்குறைய 200 புத்தக அங்காடிகள் அமைக்கப்பட உள்ளன. கண்காட்சியில் சிறப்பு அம்சமாக குழந்தைகளுக்கான கதை சொல்லல், பயிலரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை கொண்ட சிறார் அரங்கமும், கல்லூரி மாணவ, மாணவிகள், விருப்பமுள்ள பொதுமக்கள் பங்கேற்கும் கவிதை, கட்டுரை, பேச்சு, புனைவு, நாகம், சினிமா, தொல்லியல், நுண்கலை தொடர்பாக பயிலரங்கள் சிறந்த வல்லுநர்களை கொண்டு நடத்தப்படும்.
தினமும் மாலை வேளையில் பள்ளி, கல்லூரி மாணவியர்களின் கலை நிகழ்ச்சி, நட்சத்திர பேச்சாளர்களின் உரை வீச்சுகள் , பட்டிமன்றங்கள் நடைபெறுகின்றன.
எனவே, வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றும் பொருட்டு இப்புத்தக கண்காட்சியில் சிறார்கள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பயனடைய வேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.