கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே விவசாயிகள் மீது பொய் புகார் கொடுத்த கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து, ஒரத்தி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் தின்னலூர் கிராமம் உள்ளது. இங்கு, அரசு புறம்போக்கு நிலம் சுமார் 45 ஏக்கர் உள்ளது. இந்நிலத்தில், அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வருவாய் துறையினர் அந்த நிலத்தில் விவசாயம் செய்யக்கூடாது என சில நாட்களுக்கு முன்பு தகவல் பலகை வைத்துள்ளனர். மேலும், அந்த இடத்தில் மரக்கன்றுகளை நட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வரும் நிலத்தினை.

அதை ஆக்கிரமிக்கும் நோக்கில், மரக்கன்றுகளை நடுவது மட்டும் சரியான செயலா என கேள்வி விவசாயிகள் எழுப்பினர். இதற்கு, அந்த மரக்கன்றுகள் நடும் பணியை தடுத்ததாக சொல்லி விவசாயிகள் மீது வருவாய் துறை சார்பில் ஒரத்தி காவல் நிலையத்தில் அவர்கள், மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்துவரும் நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் செயல்பட்டுவரும், நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்ந்து அந்த நிலத்தில் விவசாயம் செய்திட அனுமதிக்க வேண்டும். விவசாயிகள் மீது பொய் புகார் கொடுத்த கிராம நிர்வாக அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஒரத்தி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு  சங்கத்தின் வட்டக்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.