தேனி: போதை ஊசி விற்பனை… பெரிய நெட்ஒர்க் – பெண் உட்பட 6 பேர் போலீஸில் சிக்கியது எப்படி?

தேனி மாவட்டத்தில் போதைக்காக பயன்படுத்தக்கூடிய மருந்துகளை இளைஞர்கள் பயன்படுத்தி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். அதில் உத்தமபாளையத்தைச் சேர்ந்த முகமது மீரான்(22), மாணிக்கம் (19) ஆகிய இருவரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது மருத்துவத்துறையில் வரைமுறைபடுத்தப்பட்டு மருத்துவரின் பரிந்துறையின் பேரில் மட்டும் பயன்படுத்தக்கூடிய ஒரு ஊக்கமருந்தை வைத்திருந்தை அறிந்தனர்.

முகமதுமீரான்

மேலும், அவர்கள் அந்த மருந்தை தவறான வழியில் போதைக்காக ஊசி மூலமாக பயன்படுத்தி வந்ததோடு, அதிக லாபத்துக்காக இளைஞர்களிடம் விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது.

ஜோனத்தன்மார்க்

இவர்கள் சின்னமனூரைச் சேர்ந்த தங்கேஸ்வரன், காமாட்சிபுரத்தைச் சேர்ந்த சரவணக்குமார் ஆகியோர் மூலம் அறிமுகமான திருச்சி கருமண்டபத்தைச் சேர்ந்த ஜோனத்தன்மார்க் (30) என்பவரிடம் வலைதளம் மூலம் போதை தரக்கூடிய மருந்துகளை பேருந்தில் கடத்தி வந்து தேனி மாவட்டத்தில் விற்று வந்துள்ளனர். அதற்கான பணப்பரிவர்த்தனை கூகுள் பே மூலம் நடத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான ஜோனத்தன்மார்க்கை திருச்சியில் வைத்து கைதுசெய்தனர். விசாரணையில், பொறியியல் பட்டதாரியான ஜோனத்தன்மார்க் திருச்சியில் பிஸ்லி பார்மா பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.

சரவணக்குமார்

இவர் மதுரையில் ஒரு மருந்து நிறுவனத்திடமிருந்து க்ரீன் என்ற ரகசிய குறியீடு மூலம் ஒரு ஊக்க மருந்தையும், சென்னையில் ஒரு மருந்து நிறுவனத்திடமிருந்து பிங்க் என்ற ரகசிய குறியீடு மூலம் ஒரு ஊக்க மருந்தையும், புனேவில் ஒரு மருந்து நிறுவனத்திடமிருந்து ஆரஞ்ச் என்ற ரகசிய குறியீடு மூலம் ஒரு ஊக்க மருந்தையும் கொள்முதல் செய்துள்ளார். அதனை உறவினர்களுக்கு மருந்துகள் அனுப்புவதாகச் சொல்லி பேருந்துகளில் அனுப்பி விற்பனை செய்து வந்துள்ளார்.

தங்கேஸ்வரன்

இவ்வாறு தமிழ்நாட்டில் சென்னை, ஒசூர், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கேராளவின் பாலக்காடு, திருவனந்தபுரம், மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், பாண்டிச்சேரியிலும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

மேலும் அவருக்கு உதவியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த வினோதினி என்பவர் ஜோனத்தன்மார்க்-க்கு உதவியாக இருந்ததால் அவரையும் போலீஸார் கைதுசெய்தனர். இதையடுத்து அவரிடம் போதைக்காக விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த வரையறைக்கு உட்படுத்தப்பட்ட மருந்து பாட்டில்களை கைப்பற்றியதோடு ஜோனத்தன்மார்க்கின் 3 வங்கிக் கணக்குகளை போலீஸார் முடக்கியுள்ளனர்.

இதில் தொடர்புடைய ஜோனத்தன்மார்க், அவர் உதவியாளர் வினோதினி, முகமது மீரான், மாணிக்கம், தங்கேஸ்வரன், சரவணக்குமார் ஆகியோரைக் கைதுசெய்து இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.