துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று(ஆக.,27) துவங்குகிறது. இதில் சாதித்து இந்திய அணி எட்டாவது கோப்பை வெல்லக் காத்திருக்கிறது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 15வது சீசன் ‘டி-20’ தொடராக இன்று எமிரேட்சில் துவங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உட்பட ஆறு அணிகள் பங்கேற்கின்றன.
சாதிக்குமா இந்தியா
ஆசிய கோப்பை தொடரில் ஏழு முறை கோப்பை வென்றது ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா. தற்போது எட்டாவது முறையாக சாதிக்க வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு அணிகளும், தங்களது உலக கோப்பை (அக். 16-நவ. 13, ஆஸி.,) அணியை முடிவு செய்ய இத்தொடர் உதவியாக இருப்பது உறுதி.
தவிர செப். 15ல் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது. இது இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய நெருக்கடியை தந்துள்ளது. கேப்டன் ரோகித்துடன் இணைந்து துவக்கம் தர லோகேஷ் ராகுல் உள்ளார். கோஹ்லி ரன் மழை பொழிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
ரிஷாப் பன்ட், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, சூர்யகுமார், ஜடேஜா தங்கள் பங்கை சிறப்பாக செய்யலாம். பவுலிங்கில் பும்ரா, ஹர்ஷல் படேல் இல்லாத நிலையில் புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் மீது எதிர்பார்ப்பு காணப்படுகிறது. சுழலில் அஷ்வின், ஜடேஜா, சகால் சாதிக்கலாம். இந்திய அணி தனது முதல் போட்டியில் நாளை, பாகிஸ்தானை சந்திக்கவுள்ளது.
பாக்., எப்படி
கடந்த 12 மாதங்களாக பாகிஸ்தான் அணி, சர்வதேச அரங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடைசியாக 10 ஆண்டுக்கு முன் ஆசிய கோப்பை வென்றது. இம்முறை வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிதி இல்லாதது பலவீனம். முகமது வாசிம் முதுகு பகுதி காயத்தால் அவதிப்படுவது சிக்கல் தரலாம். முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் ஆசம், பகர் ஜமானை அதிகம் நம்பியுள்ளது.

தேறுமா இலங்கை
பயிற்சியாளர் சில்வர்உட் தலைமையில் இலங்கை அணி நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. கேப்டன் ஷனாகா, குணதிலகா, நிசாங்கா, அசலங்கா, பானுகா, ஹசரங்கா என அணியில் திறமைக்கு பஞ்சமில்லை.
திணறும் வங்கதேசம்
கடந்த ‘டி-20’ உலக கோப்பை தொடருக்குப் பின் வங்கதேச அணி சர்வதேச அரங்கில் தொடர்ந்து திணறி வருகிறது. சாகிப் அல் ஹசன் தலைமையில் மீண்டு வர முயற்சிக்கிறது. தொழில்நுட்ப இயக்குனராக நியமிக்கப்பட்ட முன்னாள் தமிழக வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் உதவ காத்திருக்கிறார்.
முதல் மோதல்
முகமது நபி கேப்டனாக உள்ள ஆப்கானிஸ்தான் அணி, குறைந்தபட்சம் ‘சூப்பர்-4’ சுற்றுக்கு முன்னேற முயற்சிக்கும். முன்னணி ‘சுழல்’ பவுலர் ரஷித் கான் அணியின் துருப்புச்சீட்டாக இருப்பார். தவிர ஹாங்காங் அணி, நான்காவது முறையாக ஆசிய கோப்பை தொடரில் களமிறங்கியுள்ளது. இன்று நடக்கும் முதல் மோதலில் இலங்கை, ஆப்கானிஸ்தான் (‘பி’ பிரிவு) மோதுகின்றன.

இதுவரை சாம்பியன்
ஆசிய கோப்பை வரலாற்றில் இதுவரை இந்திய அணி அதிகபட்சமாக 7 முறை (1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதனையடுத்து இலங்கை 5 (1986, 1997, 2004, 2008, 2014), பாகிஸ்தான் 2 (2000, 2012) அணிகள் மட்டுமே கோப்பை வென்றுள்ளன.
* வங்கதேச அணி 3 முறை (2012, 2016, 2018) பைனல் வரை சென்றது.
* ஆப்கானிஸ்தான் ஒரு முறை (2018) ‘சூப்பர்-4’ சுற்று வரை சென்றது.
* ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (2004, 2008, 2016), ஹாங்காங் (2004, 2008, 2018) அணிகள் தலா 3 முறை லீக் சுற்றோடு திரும்பின.
* ஓமன், நேபாளம், மலேசியா, சிங்கப்பூர், குவைத் அணிகள் ஒரு முறை கூட பிரதான சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்